Sunday, July 31, 2016

எப்போதும் போல்

எண்ண ஓட்டங்கள்
கட்டுக்கடங்கவில்லை
கண்மூடி இருந்தேன்
நித்திரையும் இல்லை
கவிதைக்காக காத்திருந்தேன்
எப்போதும் போல்
நான் இறங்கும் இடம் வந்தது
பேருந்து பயணத்தில் ....

Monday, November 18, 2013

இப்படிக்கு,

         வேண்டாதவைகளை
           இலவசமாய்
           வாங்கிக்கொள்ள , நாங்கள்
           இருந்தாலும்...
            தார்மீக பொறுப்பு
            தற்காலிகமாய் ஏற்கப்படும்
            என்று தலையில் அடித்து
            சொன்னாலும்
            கவனிப்பார் இன்றி
            அவலமாய் கிடக்கிறோம்
            இப்படிக்கு,
           குப்பைத்தொட்டிகள்
            இந்திய தெருக்களிலிருந்து.  
          
 
 

Thursday, August 01, 2013

நண்பனின் சித்திரம்

வண்ணங்கள் உருமாறி 
வடிவங்களால் மெருகேறி
விரல்களின் வித்தைகளால்  
சித்திரமாய் உயிர்பெற்று 
விழியோடு கதைபேசி 
நெஞ்சத்தின் நிகழ்வுகளாகி 
நினைவுகளோடு உறைந்த  
உந்தன்  படைப்புகள் 
காலத்துக்கும் 
கலைகளுக்கு சான்று.
நீயோ 
கலைஞனுக்கு சான்று.    

Tuesday, December 20, 2011

மெல்லத் தமிழ் இனி ......


   திராவிட மொழியான தமிழ் மொழி பலதரப்பட்ட தமிழ் குடிமக்களால்  உலகமெங்கும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பலவகையான மொழிகளுள் செம்மொழி  என்கிற உயரிய நிலைப்பாட்டினை அடைந்த முதல் மொழி தமிழ் மொழிதான். உலகில் தொன்றுதொட்டு வாழும் சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். நம் தமிழ் மொழியின் இலக்கிய படைப்புகள் இரண்டாயிரம்  ஆண்டுகள் முற்ப்பட்ட  மக்களின் வாழ்வியல் மற்றும் மொழியியல் வரலாற்றினை நமக்கு பறைசாற்றுகின்றன. திராவிட மொழிகளிலே பழமையான ஆவன வகை இலக்கியங்கள் கொண்டுள்ள மொழி தமிழ் மொழிதான். தமிழ் இலக்கியங்களின் தனித்தன்மையும், வகைதிரிபு வளமும் ஒருங்கே பெற்ற காரணத்தால், தமிழ் மொழி தலைச்சிறந்த வாழ்வியல் மரபினையும், இலக்கியங்களையும்  இந்த உலகிற்கு தந்துள்ளது.  இத்தனை அறிய சிறப்புகளையும், வரலாற்றினையும் கொண்ட தொன்மையான தமிழ் மொழி, நாம் வாழ்ந்து கொண்டுஇருக்கும்  இந்த காலகட்டத்தில் எத்தகைய பரிநாமங்களுடனும், பரிநாமத்தேவைகளுடனும் வழக்கில் உள்ளது என்பதை உணர அவசியமாகிறது.      

   தமிழர்கள் வாழ்வதால் தமிழ் நாட்டில்  அரசியல் நோக்குடனோ  அல்லது உண்மையான தமிழ் மொழி பற்றினாலோ ஆங்கிலத்தை தவிர பிறமொழிகளை பயிற்று மொழியாய் அனுமதிக்கப் படவில்லை.   எனினும் உலகப் பொதுமொழியான ஆங்கிலம் மெல்ல மெல்ல தமிழ் மொழியில் கருத்து பரிமாற்றத்தின்போது வார்த்தைகள் மற்றும் வழக்கினையும் புறம் தள்ளி மனித மொழித்தொடர்பில் கோலோச்சுகிறதாக ஒரு குற்றச்சாட்டு. ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் அது உண்மையோ என்று தோண்றுகிறது. இதை மனதில் கொண்டே தமிழ் இனி மெல்லச் சாகும் என்று இடைக்காலத்தில் சொல்லி சென்றுள்ளதாய் கூற்று.         

   நம் தாய் மொழி தமிழாய் இருந்தாலும், நம்மை ஆதிக்கம் செய்ததால் ஆங்கிலத்தை  பயிற்று மொழியாய் ஏற்று கொண்டோம். தமிழை விட்டுக்கொடுக்காமல் ஆங்கிலத்தோடு பிறமொழிகளையும் போற்றி இருக்கவேண்டும்.  இதை வலியுறுத்த காரணம், நம் தமிழ் மொழி மூலம் உரையாடும் போது ஆங்கில வார்த்தைகளின் கலப்பு களைய முடிய வகையில் பிணைந்துள்ளது. மேலும் ஆங்கில வழி கல்வியின் மூலம் இப்போது பல தமிழர்களுக்கு தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டும் இருக்கிறது. இவர்களக்கு தமிழில்  எழுதவும், படிக்கவும் தெரியாது. இப்படி சொல்லிக்   கொள்வதில் தமிழர்கள் சிலர் பெருமையாகவும் நினைக்கிறார்கள். இந்த எண்ணிக்கை சில வருடங்களாக அதிகரித்து உள்ளது என்பது வேதனையான செய்தி.
   உலகமயமாக்குதலால்  மேலை நாட்டு கலாச்சாரம், உபயோகப் பொருட்கள், தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழிற்பரிவர்தனையின் காரணமாக நம் தமிழ் நசுங்கிகொண்டு இருக்கிறது என்பது மறுக்கமுடியா உண்மை. இதை முறியடிக்க சில அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன. இதன் விளைவாக தான் இன்று bakery  - அடுமனையாகி, furnitures - அரைகலன் என்று மாறி பெயர் பலகைகளில் மட்டும் உள்ளது. தமிழகத்தில் உயர் கல்வி அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் கல்வி அனைத்தும் அந்நாட்டு மொழிகளிலே புகட்டப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால், புதிதாய் அறியப்படும் ஒவ்வொரு ஆங்கில வார்த்தைகளுக்கும் தங்கள் மொழியில் இணையான வார்த்தை உருவாக்கி தங்களின் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

   உண்மையை நிலையைப் நோக்கினால் தமிழில் உள்ள எத்தனையோ சொற்களுக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை. உதாரணம் - மெய்சிலிர்க்கிறது என்கிற வார்த்தைக்கு இணையான  ஆங்கில வார்த்தை கிடையாது. நிதர்சனமாய் தமிழை யார் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கிராமத்து வாசிகள்தான். நகரங்களை  காட்டிலும் கிராமங்களில் உலகமயமாகுதலின் தாக்கம் குறைவாக இருப்பதன் காரணமே அது. கிராமத்து வீட்டு அடுக்களையில் தொடங்கினால் அடுப்பு, சட்டி, பானை, கூழ், விறகு, சோறு,  என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆதலால்தான் கிராமத்தில் வாழும் சொக்கனும் சொக்கியியும்  நம் தமிழை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் இந்த உலகமயமாகியுள்ள இணையம் மற்றும் பிற ஊடகங்களின் வாயிலாக எண்ணங்களை பரிமாறிக்கொள்கிறார்கள் . இந்த கண்ணோட்டத்தில் தமிழ் வளர்ந்துகொண்டு இருக்கிறது.    என்றாலும் வெகு சிலரைத் தவிர  மற்ற எல்லோரும் பிற மொழி சொற்களை  மாற்றம் இன்றி தங்களின் படைப்புகளில் பயன்படுத்துகிறார்கள். அதைபோல்  நகரத்து வீட்டின் அடுக்களையில் உள்ள gas stove, cooker, cylinder, lighter, rice எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாய் கிராமத்து மண்ணை   மிதித்து ஆகிரமிப்பு செய்யயுள்ளது. ஆகையால் நம்மிடையே ஊடுருவியுள்ள இந்தகைய ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கம் புழக்கத்திற்கு அவசர தேவையாகிறது.

   பிற நாட்டு நுட்ப்பத்தால் அறியப்படும், அடையலாம் கொள்ளும் சொல் எதுவாக இருந்தாலும் அதற்கு இணையான தமிழாக்கத்தில்தான் தமிழகத்தில் அறியப்பட வேண்டும்.   ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம்  நாள் தோறும் இறக்குமதி செய்துக்கொண்டு இருக்கும்  ஆங்கில வார்த்தைகளுக்கு நிகறான தமிழ் சொற்கள் இல்லை. முதலில் இதை சமன் செய்ய வேண்டும். பிறகு வழக்கத்திற்கு கொணரவேண்டும். ஒரு கோணத்தில் இருந்து  பார்த்தால் இது ஒரு தீர்வாகும்.  தமிழ் மொழி ஆய்வாளர்கள் இந்த தலையாய கடனை ஆற்றவேண்டும். புதிய சொற்கள் கொண்ட புதுபிக்கப்பட்ட அகராதியை  வருடம்தோறும் வெளியிடவேண்டும். அந்த புதிய வார்த்தைகளை பேச்சு வழக்கில் பயன்படுத்திட ஆவனசெய்ய வேண்டும். இலக்கியகள், ஊடகங்கள் மூலமாக பரப்பும் வகை செய்ய வேண்டும். மேற்கூறிய நிலையினை தமிழ்  அடைந்தால் நம் தமிழ் மொழி எப்போதும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும் என்பதில் சிறுதும் ஐயமில்லை.

               வாழ்க தமிழ்!                                                 வளர்க பாரதம்!              
                           
 
  

Sunday, June 13, 2010

என் கவிதைகளின் கருவாய் .....

என் கவிதைகளின் கருவாய்

ஆற்றாமையே அகப்படுகின்றன
காரணம் - அந்த
சந்தர்ப்பங்களின்
தாக்கம் - என்னைi
விடுவிப்பதில்லை
இல்லை இல்லை
நான் என்னை
விடுவித்துக்கொள்ள
மறந்துவிடுகிறேன்.

என் கவிதைகளின் கருவாய்
கறைபடிந்த கண்ணீர்
இருப்பதாய் குற்றச்சாட்டு
காரணம் - நான்
சோகங்களில் மட்டுமே
இன்பத்தை காண்கிறேன் .

இன்னும் சிலர் - நான்
வட்டத்துக்கு வெளியே
இருந்து - நிஜத்தை
நிந்திப்பதாய் பேச்சுக்கள் ..
உண்மை எதுவாகினும்
வார்த்தை தர்கத்திற்கு
நான் தோது இல்லை.

வாழ்வை ரசித்துதான்
வார்த்தைகள் வருகின்றன
துன்பத்தின் வடு
எல்லாம் இனி
சுகமாய் வருடும்
என்கிற ஏக்கத்துடன்
என் கவிதைகளின் கரு ......

பொறாமை

என் அறையின்
ஜன்னலுக்கு
வெளியே இருக்கும்
வேப்பமர நிழலில்
நான் பார்க்கும் போது
எல்லாம் ஒய்யாரமாய்
உறங்கும் நாய்.

என் அன்பு கண்ணம்மா ...

எனக்கு கொள்ளை காதல்
இவள் மீது - என்
தாயை விட.

எனை ஈன்றவளின்
பார்வையில் நான் அழுத்தக்காரி
காரணம் - கண்ணம்மாவின்
கண்ணீருக்கு மட்டும்
நான் கரைந்து போகும்
மாயம்தான்.

பள்ளியில்லிருந்து
சோர்வோடு வருவேன் என்று
தின்பதற்கு பண்டங்கள்
செய்து வைப்பாள்.
இல்லையேல் என்
கைபிடித்து அழைத்துசென்று
முக்குட்டு கடையில்
பழம் வாங்கி கொடுப்பாள் .

என் அன்னையின்
மார்பு முட்டி பசி ஆரிய
தருணங்களை விட
இவளின் கதை கேட்டு
அவள் மேல் கால் போட்டு
கட்டிக்கொண்டு
உறங்கிய கணங்களே
 சொர்க்கம்.

இன்றும் நான்
செய்யும் குறும்புகளில்
நியாயம் கற்பிப்பாள்.
தவறே செய்தலும்
தட்டி கொடுப்பாள் .

தலைமுறை மூத்தவள்
என்றாலும் ,
மிஞ்சி நிற்கும் அவளின்
வெகுளி தனத்திற்கு
எதை ஈடு கொடுக்க?

அவளின் சின்னப் பானைச் சட்டியில்
வைத்த சில்லரைப் பணம்
களவாடப்பட்டால் -
விசாரணை வைத்து
தோற்றுப் போவாள்.
என்றாலும் என்
நிதியமைச்சகமும் அவள்தான்
கருவூலமும் அவள்தான்.

ஊரார் கண் படும்
என்று எனக்கு
ஓயாது சுற்றிப்போடுவாள்.

சமயங்களில் என்
எண்ணங்களை உள்வாங்கும்
சினேகிதி ஆவாள்.

எப்போதும் என்னை
ஓய்வெடுக்க சொல்லும்
ஒரே ஜீவன் அவள்.

அறியாத நாட்களில்
என் உதிரத் துணியை கூட
துவைத்து உலர்த்தி இருக்கிறாள்.

இப்போதும்
கண்ணம்மா என்று
அனைத்துக் கொண்டால்
முத்ததோடு
கண்ணீரும் சிந்துவாள்.
அவளும் என்னைப் போல்
சோகத்தை உள்ளடக்கி
புன்னகை வீசுகிறாள்.

அதிகமாய் அவளை
உறவுமுறை வைத்து
அழைத்தது இல்லை
எப்போதும் கண்ணம்மா தான்

அவள் பாச கிடங்கிற்கு
ஒரு பறை சான்று
சில சமயம்
என் தந்தையோடு சேர்த்து
என்னையும் பெற்றாளோ
என தோன்றும்.

வாழ்கை ஓட்டத்தில்
உன்னை கவனிக்க
மறந்தேனோ!
உண்மையில் அதிகமாய்
வலிக்கிறது
என்றாலும்
நீ என்னை மன்னிப்பாய்,
என் செல்ல கண்ணம்மா..
என் அன்பு கண்ணம்மா...

இப்படிக்கு, அன்பிற்கு அணை போட முடியாமல்...

நான் இன்றி
நீ உணரும்
இன்பம்
உறுதியெனில் - நான்
உன்னோடு
இல்லாமலே - கண்ணீரோடு
போகிறேன் ....

Friday, January 29, 2010

கறுக்கலில் களவு போனவை ....

சுவாசிக்க வைத்த
சுந்தந்திரம் ;
பொதி சுமக்கும்
பெண் ;
கண்கள் திறந்த
கடவுள்கள்;
தண்ணீரோடு சேரும்
கண்ணீர்;
மரியாதை தேடும்
மயானம்;
வர்ணத்தை மொழுகும்
வார்த்தை ;
அன்பாய் மணக்கும்
ஆசை....
இப்படியாய் பல
கறுக்கலில் களவு போகின்றன .....

Friday, December 11, 2009

அவளும் அவனும் ...

ஆர்பரித்து கொண்டு
இருக்கிறான் - அவன்
அவளின் வருகைக்காக .

கறைபடிந்தவன் அவன்
தூயவன் இல்லை -
அவளைப்போல்.

பாவம் அவளோ
திக்கற்று திரிவாள்
அவனை சேரவே.

அவனே என்று
சரண் ஆவாள் - அவளின்
ஜீவன் இருக்கும் வரை.

உதித்ததே அவனுக்கென்று
உரிமையாய் உன்னதம்
இழப்பாள்.

அவளும் அவனும்
சங்கமிக்கும்
பிரதேசங்கள் கூட
ஒருவகை மயானம் தான்

ஆம் அவள் நதி
அவன் கடல் ...