Wednesday, July 16, 2008

என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

சமுதாயப் பூங்காவில் சாதியாம் கள்ளியேன்?
அமுதான பெண் மகவை அழிக்க நினைப்பதேன்?
நமதூரில் நம் தமிழை நசுக்க நினைப்பதேன்?
பண்டைய நற்பண்பெல்லாம் பட்டுத்தான் போவதேன்?

எம நாடும் வெறுக்கின்ற ஏராளக் கொலைகளேன்?
வெண்பணி மீதெல்லாம் இரத்தக்கறை காண்பதேன்?
ஓடும் நீருக்கு ஓராயிரம் தடைகளேன்?
கூடும் வழியிருந்தும் கோடிவகை சண்டையேன்?

காவி உடைக்குள்ளே கருநாகம் புகுந்ததேன்?
காடு குறைந்ததேன்? கழனிஎல்லாம் காய்ந்ததேன்?
அரசியல் பெயராலே அநியாயங்கள் நிகழ்வதேன்?
நாவில் நரம்பில்லா நீசர்களும் வாழ்வதேன்?

பெண்ணவளை மணப்பதற்கு பெருந்தொகையை கேட்பதேன்?
மண்ணவளும் நாணுகிறாள் மக்களிதை மறப்பதேன்?
நாநிலத்து நிகழ்வுகளைக் கண்டு என்நெஞ்சு பொறுக்குதில்லையே?
ஏனிந்த கொடுமையெல்லாம் எனக்குரைக்கமாட்டீரோ?

Wednesday, July 02, 2008