Friday, December 11, 2009

அவளும் அவனும் ...

ஆர்பரித்து கொண்டு
இருக்கிறான் - அவன்
அவளின் வருகைக்காக .

கறைபடிந்தவன் அவன்
தூயவன் இல்லை -
அவளைப்போல்.

பாவம் அவளோ
திக்கற்று திரிவாள்
அவனை சேரவே.

அவனே என்று
சரண் ஆவாள் - அவளின்
ஜீவன் இருக்கும் வரை.

உதித்ததே அவனுக்கென்று
உரிமையாய் உன்னதம்
இழப்பாள்.

அவளும் அவனும்
சங்கமிக்கும்
பிரதேசங்கள் கூட
ஒருவகை மயானம் தான்

ஆம் அவள் நதி
அவன் கடல் ...

Monday, October 12, 2009

கனவுகள்

நினைவோடு
நிறைந்த
என் நிழலான
நிஜங்கள் .

கிறுக்கல்கள்

நீல வானம்
மஞ்சள் சூரியன்
வெள்ளை நிலா
இப்படியாய் ...........ஆனால்
நான் மட்டும்
அவள்.

அனுபவம்

காணிக்கையாக்கிவிட்டேன்
கண்ணீரை எல்லாம்
கரையவில்லையே
கல்லான கடவுள் ....

Sunday, October 11, 2009

அன்புக்கு ஆதரவு....

கண்கள் நீர்த்திரையாகின்றன
அதில்
காரணங்கள் கரைந்துவிடுகின்றன.

அலைகழிக்கப்படும் போதுதான்
அன்பும் அகதியாகிறது.

ஏக்கங்களின் இருப்பிடம்
இல்லாமல் போனதால்
அக்கறையும் இங்கே
அவஸ்தையாகிறது.

பாரபட்சமின்றி
புரிதலும் இங்கே
ஓரிடத்தில் புதைக்கபடுகிறது
முறைதானா?

பொன்னோ பொருளோ
அல்ல
அன்புதானே
ஆதரவு கரம் கொடுங்கள்
என்றும் அன்பாய்....

நினைவுகள்....

அதே இரயில் நிலையம்
அதே நடை மேடை
அதே இருக்கைகள்
ஆனால்
இன்று யாரோ இருவரை
சுமந்து கொண்டு இருக்கிறது ......

ரொம்ப நாளா......

மரங்கள் அடர்ந்த
நீண்டதொரு சாலை
அரவமற்ற பின்னிரவு
வருடும் தென்றல்
நான்
மௌன மொழி பேசி
உன் விரல் கோர்த்து
காலார வெகுதூரம்
நடை பழக வேண்டும்

Friday, September 25, 2009

பிரிவு என்பது .....

என் வெள்ளை
துப்பட்டா
ஒவ்வொரு முறையும்
துவைக்க எடுத்து
துவைக்காமலே வைக்கிறேன்
காரணம்
நம் கண்ணீரும்
உன் வியர்வையும்
அதில் கலந்து இருப்பதால்!

Tuesday, June 30, 2009

தொடர்ந்து...

கூடை கூடையாய்
உதிரி பூக்கள்
என் மீது
எத்தனை வாசம்
ஆனாலும்
என்னோடு உள்ள
உன் வாசம் மட்டும்
என்றும் என் நாசியில்
தன்னந்தனியாய்.



Tuesday, February 03, 2009

வாழ்கவே!

ஈடுபாடு
இணக்கம்
இன்பம்
இதயத் தேடல்
இவைகளால் பிறப்பெடுத்து
புன்னகை
போர்குணம்
நேசம்
பகிர்தல்
இவைகளால் உருவெடுத்து
வாழ்க்கை
வேட்கை
வெற்றி
வேள்வி
இவைகளால் வாழ்கிறது
நீடூழி வாழ்கவே
காதலே!